இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 அக்டோபர், 2021

2021 Northeast Monsoon analysis | 2021 வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் ?

2

உங்கள் ' புதுச்சேரி வெதர்மேன் ' இமானுவேல் வழங்கும் 2021 வடகிழக்கு பருவமழை தொடர்பான உத்தேச மூன்றாம் கட்ட வானிலை அறிக்கை எழுதப்படும் நாள் : 22.10.2021

=================================

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் ?
==========================
2021 வடகிழக்கு பருவமழை தொடர்பான கடந்த இரண்டாம் கட்ட அறிக்கையில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல 25.10.2021 தேதி வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று தமிழக கடலோர பகுதிகளில் ஊடுருவி இருக்கிறது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு நிறுவனத்திடம் இருந்து இந்த மாத இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிடும்.

அந்த தேதியை அதாவது #Northeastmonsoon_onset date ஐ அறிவிக்கும் உரிமை வானிலை ஆய்வு மையத்திடம் தான் உள்ளது.அதனை அவர்கள் திறன்பட செய்வார்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்துக்களும் இருக்க முடியாது .

 


வடகிழக்கு பருவமழைக்காக நாம் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் ?
=========================
நாட்டிலேயே #வடகிழக்கு_பருவமழை யின் வாயிலாக கிடைக்க இருக்கும் மழையை சார்ந்து இருக்கக்கூடிய நிலப்பரப்புகள் மற்றும் முக்கிய நகரங்கள் தமிழகத்தில் தான் உள்ளது.இந்த காலகட்டத்தில் கேரளாவிலும் அதிக அளவில் மழை பதிவானாலும் அவர்களின் சராசரி ஆண்டு மழை அளவுகளில் 80% சதவிகிதத்தை அவர்கள் #தென்மேற்கு_பருவமழை காலகட்டத்தில் பெற்றுவிடுகிறார்கள்.மலைக்கும் கடலுக்கும் இடையிலான தூரம் என்பது கேரள மாநிலத்தில் மிகவும் குறைவு சமவெளி பகுதிகளின் எண்ணிக்கையும் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு.

தென்கடலோர மாவட்டமான #தூத்துக்குடி இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் அதன் சராசரி ஆண்டு மழை அளவுகளில் 85% சதவிகிதத்தை அடைகிறது அதேசமயம் #தூத்துக்குடி மாநகராட்சி அதன் ஆண்டு மழை அளவுகளில் 90% சதவிகிதத்தை இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் பெறுகிறது.

டெல்டா மாவட்ட கடலோர மாவட்டமான #நாகப்பட்டினம் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெரும் மழையை விட 300% சதவிகித கூடுதல் மழையை இந்த வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் தான் பெறுகிறது அதாவது அதன் ஆண்டின் சராசரி மழை அளவுகளில் 77% சதவிகிதத்தை இந்த காலகட்டத்தில் தான் பெறுகிறது அதாவது 120 செ.மீ இல் 93 செ.மீ அளவு மழையை இந்த காலகட்டத்தில் தான் பெறுகிறது.

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும் தமிழகத்தின் தலைநகரமுமான #சென்னை மாநகர் அதன் ஆண்டின் சராசரி மழை அளவுகளில் 64% சதவிகிதத்தை இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் பெறுகிறது.

ஒரு உதாரணத்துக்காக தான் தென் ,டெல்டா மாற்றம் வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து இந்த தகவலை வழங்கியிருக்கிறேன் பொதுவாக #கடலூர் , #புதுச்சேரி , # மயிலாடுதுறை , #நாகப்பட்டினம் ,#திருவாரூர் , #சென்னை , # ராமநாதபுரம் , #தூத்துக்குடி ,#திருவள்ளூர் , #செங்கல்பட்டு ,#விழுப்புரம் , #காரைக்கால் என அணைத்து கடலோர மாவட்டங்களுமே அதில் இருக்கும் அநேக கடலோர பகுதிகளுமே அவைகளின் ஆண்டு சராசரி மழை அளவுகளில் 60% சதவிகிதம் முதல் 90% சதவிகித மழையை இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் பெறுகிறது.

உட்பகுதிகளில் ஒரு ஆண்டின் சராசரி மழை அளவுகளின் 68% சதவிகிதத்தை #திருப்பூர் மாவட்டமும் 61% சதவிகிதத்தை கரூர் மாவட்டமும் இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் பெறுகிறது.

இப்படியே சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் #நீலகிரி ,#கோவை மாவட்டங்களை தவிர்த்து அநேக பிற மாவட்டங்களுக்கும் இந்த வடகிழக்கு பருவமழையின் வாயிலாக கிடைக்க இருக்கும் மழை முக்கியத்துவம் வாய்ந்தது தான் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அதிக அளவு மழையை தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தான் பெறுகின்றன கோவை மாவட்டத்தில் வால்பாறை இருப்பதால் தான் கோவையின் ஒட்டுமொத்த மழை அளவு அதிகரித்து பட்டியலில் இடம்பிடிக்கிறது அதனை தவிர்த்துவிட்டு பார்த்தால் #கோவை மாநகருக்கும் வடகிழக்கு பருவமழை முக்கியம் தான் இதில் #திருப்பத்தூர் , #கிருஷ்ணகிரி , #சேலம் , #நாமக்கல் போன்ற மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையை விட அதிக மழையை தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பெறுகின்றன.#திருவண்ணாமலை ,# #கன்னியாகுமரி மாவட்டங்கள் கிட்டத்தட்ட இரண்டு பருவமழைகளிலும் சமமான அளவு மழையை பெறுகின்றன.

ஆக மொத்தத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் அநேக மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்படுகிறது அதேசமயம் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவி விடுகிறது ஆகையால் தான் நாம் வடகிழக்கு பருவமழைக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோம்.

நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழைக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள்.

எல்நினோ தெற்கு அலைவு ( #Elnino_southern_oscillation) னுடைய தற்போதைய நிலை மற்றும் என்னுடைய கருத்து
=======================================
மத்திய பசிபிக் கடல் பரப்பின் அதாவது #Nino3.4 பகுதியின் வெப்பநிலை இயல்பை விட 0.8 டிகிரி செல்சியஸ் குறைந்து காணப்படுகிறது நினோ 1+2 பகுதியின் கடல் பரப்பு வெப்பநிலையும் மிக விரைவாக கடந்த சில நாட்களில் குறைந்துள்ளது இவைகள் அனைத்தும் லா நினாவுக்கான ( #lanina ) சூழல்களை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளன.2021 வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் #லாநினா சூழல்களே தொடரும்

எனது கருத்து : லாநினா எல்லாக் காலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக இருக்காது என்று கூற முடியாது உதாரணமாக தற்சமயம் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பரப்பில் ஏற்பட்டு வரும் விரைவான மாற்றங்களே இந்த நிலைக்கு காரணம்.அதேசமயம் மேற்கு பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து வருகிறது இதனுடைய தாக்கம் கிழக்கு இந்திய பெருங்கடலிலும் எதிரொலிக்கும் அதாவது கிழக்கு இந்திய பெருங்கடலின் வெப்பநிலை குறைய தொடங்கும் இது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமே தவிர்த்து பாதகம் இல்லை.

Indian Ocean Dipole இன் தற்போதைய நிலை மற்றும் என்னுடைய கருத்து (#IOD )
======================================
தற்போது #Indian_Ocean_Dipole (#IOD ) அதன் எதிர்மறையான கட்டத்தில் உள்ளது ( #negativeIOD )

எனது கருத்து : இப்போது நான் #எல்நினோ_தெற்கு_அலைவு தொடர்பான தகவல்களில் இறுதியில் தெரிவித்து இருந்தது போல கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை குறையும் ஆகையால் அடுத்து பிறக்க இருக்கும் மாதங்களில் அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் #Indian_Ocean_Dipole (#IOD ) அதனுடைய நடுநிலையான கட்டத்தை அடையலாம் ( IOD Negative to Neutral) இது பருவமழைக்கு சாதகமே.

மேடன் ஜூலியன் அலைவு ( #madden_julian_oscillation ) மற்றும் எனது கருத்து
=======================================
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை நிர்ணயம் செய்ய இருப்பது இந்த கடல் சார் அலைவுகளும் அவைகளின் நகர்வுகளும் தான்

மேடன் ஜூலியன் அலைவு (#MJO) இந்திய பெருங்கடல் பகுதிகளில் தான் தற்சமயம் வலுக்குறைந்த நிலையில் நிலவிக்கொண்டு இருக்கிறது அதாவது கட்டம் 2 இல் 1 க்கும் குறைவான வீச்சு அளவுடன் அது நிலைகொண்டு இருக்கிறது ( Phase 2 with amplitude less than 1)

எனது கருத்து : வலுக்குறைந்த நிலையில் இருக்கும் கடல் சார் அலைவுகளின் போக்கை கணிப்பது அவ்வளவு சுலபம் அல்ல வானிலையில் அனுபவம் சற்று குறைவாக இருப்பவர்கள் அது தமிழகத்துக்கு தற்போதைக்கு பலன் வழங்காது என்று கூறலாம் ஆனால் என்னை பொறுத்தவரையில் அது வலுகுறைந்து இருந்தாலும் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு சாதகமான கட்டத்தில் நிலைக்கொள்ளும் என்று நம்புகிறேன் நவம்பர் மாதத்தின் தொடக்க காலகட்டத்திலும் முதல் 10 நாட்களிலும் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ வங்கக்கடல் பகுதிகளுக்கு சாதகமானதாகவே இருக்கலாம்.

நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் மீண்டும் MJO வின் தாக்கம் இந்திய பெருங்கடலில் அதிகரிக்கலாம்.இது தொடர்பாக நாம் வரக்கூடிய காலங்களில் விவாதிக்கலாம்.

 

2021 வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் ? இயல்பான அளவு மழை கிடைக்குமா?

========================

எனது பதில் : நிகழும் அக்டோபர் மாதத்தில் இதுவரையில் அதாவது 23.10.2021 ஆம் தேதிவரையில் நமக்கு 172 மி.மீ அளவு மழை கிடைத்துள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இந்த மாதத்தில் மழை பதிவாகும் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு ஆகையால் நிகழும் அக்டோபர் மாத முடிவிற்குள்ளாக தோராயமாக 200 மி.மீ அல்லது அதற்கும் அதிகமாகவோ சற்று குறைவாகவோ மழை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.வடகிழக்கு பருவமழை காலகட்டத்தின் இயல்பான அளவு எனபது 447 மி.மீ அதில் 90% மழை கிடைத்தாலே அது இயல்பான அளவு தான் அதே சமயம் 110% சதவிகிததிற்கு அதிகமான அளவு மழை பதிவானால் அது இயலபுக்கு அதிகம் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 ஆக மொத்தத்தில் 403 மி.மீ அளவு மழை கிடைத்தாலே அது இயல்பான அளவு தான் அக்டோபர் மாதத்திலேயே நமக்கு 200 மி.மீ அளவு மழை கிடைக்கக்கூடிய சூழல் இருப்பதால் அடுத்த 2 மாதங்களில் சாதாரணமாக மழை பதிவானாலே நமக்கு இயல்பான அளவு மழை கிடைத்துவிடும்.

எனது கருத்து :நிகழும் ஆண்டில் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்திலும் சில முறை வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்புகள் உண்டு ஆகையால் இயல்பான அளவை அடைவதில் எந்த வித சங்கடமும் இந்த ஆண்டு இருக்கப்போவது கிடையாது நாம் எதிர்பார்த்து இருந்தபடி டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பலன் வழங்கும் பட்சத்தில் நமக்கு இயல்புக்கும் அதிகமான அளவு மழை கிடைக்கலாம்.ஆகையால் நிகழும் ஆண்டும் இயல்பு அல்லது இயல்புக்கும் அதிகமான அளவு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.சுழற்சிகள் பலன் வழங்குகிற பட்சத்தில் என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 470 மி.மீ முதல் 520 மி.மீ அளவு வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கடலோர பகுதிகளில் / கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் ?

===========================

எனது பதில்  : தற்போதைய சூழல்களை நாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது வட கடலோர மாவட்டங்களுக்கு நிகழும் ஆண்டு இயல்புக்கும் அதிகமான அளவு மழை கிடைக்கலாம் அதாவது திருவள்ளூர் , சென்னை , செங்கல்பட்டு , விழுப்புரம்  , புதுச்சேரி , கடலூர் , மயிலாடுதுறை  , நாகப்பட்டினம்  , காரைக்கால் ,திருவாரூர்  உட்பட வடகடலோர மற்றும் டெல்டாவின் கடலோர மாவட்டங்களில் / கடலோர பகுதிகளில் இயல்புக்கும் அதிகமான அளவு மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உண்டு.அதேபோல நீலகிரி , தென்காசி , கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இயல்பு அல்லது இயல்புக்கும் அதிகமான அளவு மழை பதிவாகலாம்

தூத்துக்குடி , ராமநாதபுரம் , புதுக்கோட்டை , தஞ்சாவூர் , நெல்லை , உட்பட தென் கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை இந்த காலக்கட்டத்தில் பதிவாகலாம் டிசம்பர் , ஜனவரி மாதங்களிலும் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகும்.

அரியலூர் , திருப்பூர் ,பெரம்பலூர் ,சிவகங்கை , கரூர் , திருவண்ணாமலை , தேனி , காஞ்சிபுரம்  , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி , கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் இயல்பான அளவு அல்லது அதற்கும் சற்று குறைவான அல்லது கூடுதலான அளவு மழை பதிவாகலாம்.

மதுரை , திருச்சி , திண்டுக்கல் , கிருஷ்னகிரி , தர்மபுரி ,திருப்பத்தூர் ,சேலம் , ஈரோடு , நாமக்கல் ,விருதுநகர் மாவட்டங்களை பொறுத்தவரையில் சலனங்களின் நகர்வுகள் தான் இயல்பான அளவு மழையா அல்லது குறைவா என்பதனை தீர்மானம் செய்யும்.

எந்தெந்த பகுதிகளில் அதிக கனமழை பதிவாக வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் ?

=================================

டெல்டா மற்றும் அதனை ஒட்டிய /சார்ந்த பகுதிகளில் 

=====================================

சிதம்பரம்  , சீர்காழி  , பரங்கிப்பேட்டை  , பிச்சாவரம்  , பழையார் , திருமுல்லைவாசல்  , பூம்புகார்  , தலைஞாயிறு  , திருப்பூண்டி , காரைக்கால்  , நாகப்பட்டினம்  , வேதாரண்யம் , அதிராம்பட்டினம்  , மணமேல்குடி 

சென்னை மாநகரின்  புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களில் 

=============================================

கேளம்பாக்கம் , மறைமலைநகர்  , மதுராந்தகம் , தாம்பரம்  , சோழிங்கநல்லூர் , கல்பாக்கம் , மரக்காணம்  , செய்யூர்  , (காலாப்பேட் , பாகூர் ) புதுச்சேரி  , கடலூர் , மீஞ்சூர்  , பொன்னேரி

 

சென்னை மாநகரில் 

================

தண்டையார்பேட்டை  , காசிமேடு  , ஜார்ஜ்கோட்டை  , சாந்தோம் , மயிலாப்பூர்  , அடையாறு  , வேளச்சேரி  , முட்டுக்காடு , புழல் , ஸ்ரீபெரும்புத்தூர்  ,பூந்தமல்லி


 அணைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாக பதிவிடுவது மிகவும் கடினம் இவைப்போக தூரத்துக்குடி  , ராமேஸ்வரம் , பாம்பன் , மண்டபம் , காயல்பட்டினம் , திருச்செந்தூர் , வால்பாறை , கொடைக்கானல் , குன்னூர் , கோத்தகிரி  , கொடநாடு , கெட்டி , அமராவதி பகுதிகளிலும் சில காலங்களில் கனமழை பதிவாகலாம்.

 

உங்களுடைய சந்தேகங்களை கருத்துரை அதாவது Comment செய்யுங்கள் நாம் பதில் வழங்குகிறேன்.


தற்போது நிலவி வரும் சூழல்களுக்கு ஏற்ப நீட்டிக்கப்ட்ட கால இடைவெளியிலான எனது கணிப்புகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.100% சதவிகிதம் இப்படி தான் நடக்கும் என்று நான் கூறவில்லை இப்படியெல்லாம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று பதிவிட்டு இருக்கிறேன்.

வானிலை சூழல்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.


என்றும் உங்களுடன் உங்கள் ' புதுச்சேரி வெதர்மேன் ' இமானுவேல்

 


Author Image
AboutEmmanuel Paul Antony

2 கருத்துகள்: